Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 26 July 2015

பொதுக்காலம் 17 வது ஞாயிறு 26 யூலை 2015 வாசகங்கள்



திருப்பலி முன்னுரை

இறை அன்பில் நிறைவாகப் பங்கேற்க வந்திருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் திருமகன் இயேசுவின் பெய  ரால் அன்பு வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறேன். இறை நம்பி க்கையோடு ஆண்டவரைத் தேடி வந்தவர்கள் அவருடைய அன்புக்கும் கனிவுக்கும் உரியவர்கள் ஆகிறார்கள் எனும் பட்ட றிவைப் பெற்றுள்ள நாம் பெற்றுள்ள பெருவாழ்வு பகிர்ந்து வழ ங்கப்பட்டால் சிறப்புக்குரியவராவோம் எனும் உணர்த்துதலை இன்றைய திருப்பலிப் பங்கேற்பு வழியாக உணர வைக்கப்படு கிறோம். பொதுக்காலத்தின் 17 வது ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இறைவன் நமக்கு மிகுதியாக தருகிறார் என்ற கருத்தை இன் றைய திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. மக்கள் மீது பரிவு கொண்டவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்கிறார். நம் மேல் கனிவு காட்டும் இறைவன், நமது வாழ்வில் அற்புதங் களை செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் செயல்பா ட்டை நம் வாழ்வில் உணர, நாம் அன்போடும் தாழ்மையோ டும் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். ஆண்டவரின் அருஞ்செயல்களை நமது வாழ்வில் காண வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
வாழ்வுக்குரியவர்களே,
 இன்றைய முதல் வாசகம், இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததன் முன் அடையாளமாக இறைவாக்கினர் எலிசா செய்த அற்புதத்தை எடுத்துரைக்கிறது. பணியாளர் கொண்டு வந்த இருபது வாற்கோதுமை அப்பங்களைப் பலுகச் செய்து எலிசா நூறு பேரின் பசியாற்றிய நிகழ்வையும், ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப அவற்றில் மீதியும் இருந்ததாக இங்கு காண் கிறோம். நாமும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து, மிகுதியான வரங்களைப் பெற வேண்டி, இந்த வாசக த்துக்கு செவிமடுப்போம்.
இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ண க் கொடு" என்றார். அவருடைய பணியாளன்,"இந்த நூறு பேரு க்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான். அவரோ ,  "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண் ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என் றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி






பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
திருப்பாடல் 145: 10-11. 15-16. 17-18

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

வாழ்வுக்குரியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரில் முழுமையாக நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார். அன்பு, அமைதி, பொறுமை, கனிவு, தாழ்மை ஆகியவற்றைக் கடைபிடித்து, அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறியுள்ள நாம், அவரை முழுமையாக சார்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.

ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் மேலானவர்: எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி







நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா




நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு,"இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக,"இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார். இயேசு,"மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின்,"ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள்,"உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

No comments:

Post a Comment